5,000 ரூபாய்க்கு மேல் எடுத்தால் கட்டணம்!
ஒரு வங்கிக் கணக்கில் இருந்து ஒருவர் 5,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய ரிசர்வ் வங்கியின் ஏடிஎம் பிரிவு பேனல் ஒன்று பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியான வி.ஜி கண்ணன் தலைமையில் இந்த ஏடிஎம் பேனல் 2019 ஜூன் மாதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனல் அக்டோபர் 22ஆம் தேதியே தனது பரிந்துரையை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்திருக்கிறது. அதில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இந்தியாவில் 66 சதவீத ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகள் 5,000 ரூபாய்க்குக் கீழ்தான் நடந்துள்ளது. எனவே 5,000 ரூபாய்க்கு மேல் எடுக்கப்படும் பணத்துக்குக் கட்டணம் வசூலிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல், பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது வங்கிகள் கொடுக்கும் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை எண்ணிக்கை வரம்புக்கு மேல் வசூலிக்கப்படும் கட்டணத்தைத் தற்போதுள்ள 20 ரூபாயிலிருந்து 24 ரூபாயாக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறாக, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கியின் ஏடிஎம் பேனல் பரிந்துரை செய்துள்ளது.