கொரோனா வைரஸ் தடுப்பூசி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து மனிதர்கள் மீது சோதனை
இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தன்னார்வலர்களுக்கு அளித்து பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், தன்னார்வலர்கள் பலருக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து அளித்து பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது.
இதே தடுப்பு மருந்தை விலங்குகளுக்குப் போட்டு பரிசோதித்தபோது, அது பயனளிப்பதாகவும், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுவதாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான பரிசோதனை பல நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை உலகளவில் 120 தடுப்பு மருந்துகள் ஆய்வு கட்டத்தில் உள்ளன. இந்தியாவில் மட்டும் சுமார் அரை டஜன் மருந்து நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஜூலை மாதம் தன்னார்வலர்களுக்கு போடப்பட்டு பரிசோதிக்கப்படவுள்ள இந்த தடுப்பு மருந்து உள்ளூர் ஆய்வு நிலையங்களில் பிரித்தெடுக்கப்பட்டு திறன் குறைக்கப்பட்ட வைரசில் இருந்து உருவாக்கப்பட்டது.
தற்போது பரிசோதிக்கப்படவுள்ள இந்த தடுப்பு மருந்து ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனைகளில் ''பாதுகாப்பானதாகவும் நோய் எதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுவதாகவும்'' இருந்ததாக அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பாரத் பயோடெக் நிறுவனம் இரண்டு கட்டங்களாக தடுப்பு மருந்துகளை பரிசோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் அனுமதி அளித்துள்ளனர்.
இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அல்லது கட்டுப்படுத்த உதவுகிறதா என்பதை விட, பாதுகாப்பானதா என்பதை தெரிந்துகொள்ளவே இந்த இரண்டு கட்ட பரிசோதனைகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா கிருமி வகையைக் கொண்டே, இந்த தடுப்பு மருந்தை விரைவாக உருவாக்க முடிந்தது என பாரத் பயோடெக் நிறுவனம் கூறுகிறது.
''உலக அளவில் பரவிவரும் பல்வேறு வகை கொரோனா தொற்றுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் குறித்து இன்னும் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன'' என்று தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பிபிசியிடம் கூறினார்.
இந்த தடுப்பு மருந்தின் பெயர் ''கோவாக்சின்''. இந்திய தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் இணைந்து இந்த மருந்தை உருவாக்கியுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் கிருஷ்ண எல்லா கூறுகிறார்.
பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கனவே பன்றிக்காய்ச்சல் மற்றும் ரோட்டாவைரஸ் உள்ளிட்ட நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை உருவாக்கியுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தை தவிர சைடஸ் சடிலா என்ற நிறுவனம் இரண்டு தடுப்பு மருந்துகளை உருவாக்கியுள்ளது. பயோலொஜிக்கல் ஈ, இந்தியன் இம்மியூநோலோஜிக்கல்ஸ் மற்றும் மைன்வாக்ஸ் நிறுவனங்களும் தடுப்பு மருந்துகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய முயன்று வருகிறது.
உலக அளவில் நோய் தடுப்பு மருந்துகள் அதிகம் தயாரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
போலியோ, நிமோனியா, சின்னம்மை உள்ளிட்ட பல நோய்களுக்கு இந்தியாவில் தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இன்னும் ஓராண்டு காலத்தில் அனைவரையும் சென்றடையும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
தடுப்பு மருந்து என்பது ஒரு பெரிய அறிவியல் சாதனை. ஆனால் அது வெற்றிபெறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.