அதிமுக பொதுச் செயலாளார் யார்? சூடுபிடிக்கும் சசிகலா வழக்கின் முக்கியத்துவம்!
முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய போது, அதிமுக கட்சித் தொண்டர்கள் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தனர். மேலும், அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராகவும் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில் சசிகலா சிறை சென்றதும், அதிமுகவில் பல்வேறி திருப்பங்கள் அரங்கேறின.
ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்து செய்து, கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு ஏற்படுத்தப்பட்ட, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா வழக்கு தொடர்ந்தார். சிறையில் இருந்தபடி இந்த வழக்கை சசிகலா நடத்தி வந்த நிலையில், அவர் வெளியே வந்த பின்னர், அந்த வழக்கு சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முன்னதாக, சசிகலாவை பொதுச் செயலாளர் என்று ஓரளவுக்கு உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இந்த சிவில் வழக்கு 857/2018இல் வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவின்படி, வங்கிக் கணக்குகளை அவர் பார்வையிடலாம். சசிகலாவுக்குத் தெரியாமல் ஆவணங்கள் திருத்தப்படக் கூடாது. 2017ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் முன் உள்ள வாய்ப்புகளில் இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சசிகலாவை பொதுச் செயலாளர் என்று நீதிமன்றம் அங்கீகரிக்கவோ அல்லது தடை விதிக்கவோ இல்லை. எனவே, வழக்கு நிலுவையில் உள்ளபோது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் வேட்பாளர்கள் அங்கீகாரத்துக்கான ஏ ஃபார்ம், பி ஃபார்மில் கையெழுத்திடும் உரிமையை தேர்தல் ஆணையத்திடம் சசிகலா கோரலாம். அதனை தேர்தல் ஆணையம் நிராகரித்தால் உச்ச நீதிமன்றத்தை சசிகலாவால் நாட முடியும்.