கூட்டணிக்காக அமைதியாக இருக்க முடியாது! அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறணும்! : கார்த்தி சிதம்பரம்

கூட்டணிக்காக அமைதியாக இருக்க முடியாது! அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறணும்! : கார்த்தி சிதம்பரம்

கூலிப்படைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். காவல்துறையினர் என்கவுண்டர் செய்து வழக்கை முடிக்க நினைக்கிறார்கள் என்று திமுக கூட்டணி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கில் இதுவரை ஒருவரை கூட போலீஸ் கைது செய்யவில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலையில் இதுவரை ஒருவரை கூட காவல்துறை கைது செய்யவில்லை. கேசை முடிப்பதற்காகவே என்கவுண்டர் செய்கிறது என்றும் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் பேசியதாவது:-

நம்முடையை கட்சியை சேர்ந்தவர்.. நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் படுகொலை செய்யப்படுகிறது. அவரது கொலையில் இதுவரை ஒருவரை கூட காவல்துறை கைது செய்யவில்லை. எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் அதை பற்றி நான் பேசியது இல்லை. அதை பற்றி முறையிடுவது இல்லை. அதிகம் மவுனம் காத்து வந்தோம். அது எப்படி முடியும். ஒரு தேசிய கட்சி. நாட்டின் எதிர்க்கட்சி. அந்த கட்சியை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்படுகிறார். அதில் ஒருவரை கூட போலீஸ் கைது செய்யவில்லை. அரசை குறை சொல்லியது இல்லை. அதை பற்றி கேட்காமல், அதனை விவரிக்காமல் எப்படி இருக்க முடியும்.

இப்போது கூலிப்படை கொலைகள் நடப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைப்பற்றிய கருத்தை கண்டிப்பாக சொல்ல வேண்டும். என்கவுண்டரை கண்டிப்பாக கண்டிக்க வேண்டும். காவல்துறை ரவுடிகளை என்கவுண்டர் செய்து கேஸை சரியாக நடத்துகிறார்கள் என்று நினைக்காதீங்க.. கேசை முடிப்பதற்காக தான் என்கவுண்டர் செய்கிறார்கள். இதையெல்லாம் பேசும்போது மின் கட்டணத்தை பற்றியும் நாம் பேசியாக வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவனுக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கிற உரிமை நமக்கு இல்லையா? நாமும் நம்முடைய கருத்தை ஆழமாக பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் நம்மை திரும்பி பார்ப்பார்கள். நாம் கூட்டணியை மதிக்கிறோம். திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். திமுகவின் திட்டங்களை மதிக்கிறோம். மகளிர் உரிமை தொகை திட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் நாம் பொதுப்பிரச்சினைகளில் பேச தயக்கம் காட்டுகிறோம். இனி தயக்கம் காட்ட கூடாது.

இனிமேல் நிச்சயமாக பாஜகவுக்கு இறங்கு முகம் தான். காங்கிரசுக்கு ஏறு முகம் தான். அரசியலில் ஆளுங்கட்சி ஒன்று இருக்கிறது. எதிர்க்கட்சி ஒன்று இருக்கிறது. இப்படி இரண்டுபக்கமும் இல்லாமல் இரண்டுங்கெட்டாங் கட்சியாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. 2029க்கு முன்பாக 2026 தேர்தல் இருக்கிறது. தமிழக அமைச்சரவையிலும் காங்கிரஸ் இடம்பெற வேண்டும். என்று அவர் கூறினார்.